பருவநிலை மாற்றம் : ஐ.நா. நிபுணர் குழு புதிய எச்சரிக்கை
நவ.03,2014. வெப்பவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை
என்றால், நிவர்த்திசெய்ய முடியாத பாதிப்புகளை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கும்
ஆய்வறிக்கை ஒன்றை பருவநிலை மாற்றம் சம்பந்தமான ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்டுள்ளது. புவி
வெப்பமடைந்து வருவதற்கு மனிதச் செயலே முக்கிய காரணம் எனக் கூறும் இந்த நாற்பது பக்க அறிக்கை,
புவியின் வெப்பம் ஆபத்தை உண்டாக்கும் அளவுகளில் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டுமாயின், இந்த
நூற்றாண்டின் நடுப்பகுதியோடு, உலகத்துக்கு தேவையான மின்சாரம், முழுமையாகவே கரிம வெளியேற்றம்
இல்லாத உற்பத்தி முறைகளிலிருந்து வரவேண்டும் என எச்சரிக்கிறது. கோபன்ஹாகனில் இந்த
அறிக்கை வெளியிடப்பட்டபோது பேசிய ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், பருவநிலை மாற்றங்களுக்கு
அதிகம் பங்களிக்காதவர்களான ஏழை மக்களும் பலவீனமான சூழ்நிலையில் உள்ளவர்களுமே பருவநிலை
மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று கூறினார்.