2014-11-03 15:53:41

ஐ.நா.வில் திருப்பீடம் : அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏழைகளுக்கும் பயன்தர வேண்டும்


நவ.03,2014. உலக அறிவியல் முன்னேற்றப் பலன்கள், ஏழைகளுக்கும் பலன் தருபவைகளாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புவதாக ஐ.நா. பொது அவைக்கூட்டத்தில் உரைத்தார் ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவ்சா.
விண்வெளியை அமைதி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதில் அனைத்துலக ஒத்துழைப்பு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் அவ்சா அவர்கள், அதிகப் பொருளாதாரச் செலவுகளை உள்ளடக்கிய விண்வெளி ஆய்வுகளிலிருந்து கிட்டும் புதிய தகவல்கள் மக்களிடையே சரிநிகரற்ற தன்மைகளை வளர்ப்பதற்கு காரணமாகாமல், அனைவரும் பயனடைவதற்கு உதவும் ஒன்றாக பொதுவில் வைக்கப்படவேண்டும் என்றார்.
அனைவருக்கும் இந்தக் கண்டுபிடிப்புகள் பயன்படவேண்டுமெனில், அடிப்படையில் அவை அமைதிக்கென பயன்படுத்தப்படுபவைகளாக இருக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் பேராயர் அவ்சா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.