2014-11-01 14:41:59

புனிதரும் மனிதரே : நவம்பர் 1, 2 - முன்பின் முரணாக வரும் திருநாள்கள்?


நவம்பர் 1 புனிதர் அனைவரின் திருநாள். நவம்பர் 2 இறந்தோர் அனைவரின் நினைவு நாள். இவ்விரு நாட்களும் ஒன்றையொன்று தொடர்ந்து வருவது மனதில் ஒரு சில எண்ணங்களை எழுப்புகிறது. இவ்விரு நாட்களும் முன்பின் முரணாக வருகின்றனவோ என்று சில வேளைகளில் நான் நினைப்பதுண்டு. இறப்புக்குப் பின் புனிதமா? அல்லது புனிதம் அடைந்தபின் இறப்பா?
பொதுவாக ஒருவர் இறந்ததும் அவரைப் பற்றிய நல்லவை பேசப்படும். ஒருவரது குறைகளைக் குறைத்துவிடும், அல்லது மறைத்துவிடும் வல்லமை பெற்றது மரணம். ஒருவர் இறந்தபின், மறைந்தபின் அவரைப்பற்றி நாம் கூறும் நல்லவற்றை அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது முன்னிலையில், அவர் காதுபடக் கூறியிருந்தால், அவர் இன்னும் நல்ல வழியில் வாழ்ந்திருப்பாரே.
இறந்தபின் வழங்கப்படும் புகழ் மாலைகளை, நல்லவர் என்ற மரியாதையை, வாழும்போதே ஒவ்வொருவருக்கும் நாம் கொடுத்தால், இவ்வுலகில் வாழும் புனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே. புனிதர்கள் விண்ணுலகில்தான் இருக்கவேண்டும் என்றில்லையே. தாங்கள் நல்லவர்கள் என்று வாழ்நாள் எல்லாம் உணரும் மனிதர்கள், புனிதர்களான நிறைவோடு இவ்வுலகை விட்டு விடைபெற்று போகலாமே.
இந்த எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்தில்தான் கத்தோலிக்கத் திருஅவை, புனிதர் அனைவரின் திருநாள், இறந்தோர் அனைவரின் நினைவு நாள் என்ற வரிசையில் இவ்விரு நாட்களையும் கொண்டாட நம்மை அழைக்கிறதோ? சிந்திக்க வேண்டிய கருத்து.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.