திருப்பீடமும், இத்தாலிய அரசும் இணைந்து விளையாட்டுப் போட்டிகளில் நன்னெறியை
வலியுறுத்தும் முயற்சிகள்
அக்.30,2014. "நற்செய்தியை ஒவ்வொருவருக்கும் கொணரும் பணியே, திருஅவையின் தலையாயப் பணியாகும்"
என்ற வார்த்தைகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்ட Twitter செய்தியாக
அமைந்தது. மேலும், விளையாட்டுப் போட்டிகளில் நன்னெறி விழுமியங்களை வலியுறுத்தும் முயற்சிகளை
மேற்கொள்வதற்கு, திருப்பீடக் கலாச்சார அவையும், இத்தாலிய அரசும் இணைந்து, இப்புதன் மாலை
ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர், கர்தினால்
Gianfranco Ravasi அவர்களும், இத்தாலிய பாதுகாப்புத் துறை அமைச்சர், Roberta Pinotti
அவர்களும் இந்த ஒப்பந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதற்கிடையே, டிசம்பர் 12ம் தேதி
கொண்டாடப்படும் குவாதலுப்பே அன்னை மரியா திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
மாலை 6 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவில் திருநாள் திருப்பலி நிகழ்த்துவார் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.