2014-10-30 15:34:05

திருத்தந்தை பிரான்சிஸ் - ஆன்மீக வாழ்வில் முன்னேறுவது ஒரு போர்


அக்.30,2014. ஆன்மீக வாழ்வில் முன்னேறுவதும், ஆண்டவரைப் பறைசாற்றுவதும் எளிதானவை அல்ல, அவற்றை ஒரு போராக மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
புனித பவுல் அடியார் எபேசியருக்கு எழுதியத் திருமுகத்தில், கிறிஸ்தவ வாழ்வு ஒரு போர் என்று கூறியுள்ளதை மையப்படுத்தி, இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையில் திருத்தந்தை தன் கருத்துக்களைப் பகிர்ந்தார்.
நாம் மேற்கொள்ளும் போர், உலகில் நிலவும் பெரும் சக்திகளுக்கு எதிரானது என்று கூறியத் திருத்தந்தை, தீய சக்தியான சாத்தானைக் குறித்து இன்றைய உலகம் கேலியாக நினைப்பதும், சாத்தான் இல்லையென்று மறுப்பதும் ஆபத்தான போக்கு என்று கூறினார்.
இந்தப் போரில் நம்மைக் காத்துக்கொள்ள அணியும் கவசங்களில், இடைவிடாத செபம் ஒரு முக்கியக் கவசமாக விளங்குகிறது என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரு போர் என்றாலும், இறைவன் நம்மோடு இணைந்து போரிடுவதால், நாம் எதனையும் எதிகொள்ளும் துணிவையும், வெற்றியின் மகிழ்வையும் அடைகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.