இந்து அடிப்படைவாதக் குழுவினர் இணையதளத்தில் தங்கள் பணியை விரிவாக்குவது இந்திய சமுதாயத்திற்கு
ஆபத்து - அருள்பணி செட்ரிக் பிரகாஷ் சே.ச.
அக்.30,2014. இந்து அடிப்படைவாதக் குழுவான RSS பிரிவினர் தங்கள் இணையதளத்தில் மேலும்
மூன்று மொழிகளை இணைத்து, தங்கள் கருத்துக்களைப் பரப்புவது, மத சார்பற்ற இந்திய சமுதாயத்திற்கு
ஆபத்து என்று இந்தியாவில் பணியாற்றும் இயேசு சபை அருள் பணியாளரான செட்ரிக் பிரகாஷ் அவர்கள்
கூறினார். இந்து மதப் பிரச்சாரத்தை வன்மையான வழியில் புகுத்த விழையும் RSS பிரிவைச்
சேர்ந்தவர்கள் தங்கள் செய்திப் பணிகளை பத்து மொழிகளில் ஆற்றிவந்தனர். தற்போது, தங்கள்
பணியை விரிவாக்கும் நோக்கத்துடன் வங்காளம், அஸ்ஸாம், மலையாளம் ஆகிய மொழிகளை இணைத்துள்ளனர். இதுகுறித்து
ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த மனித உரிமை ஆர்வலரான அருள்பணி செட்ரிக் பிரகாஷ் அவர்கள்,
RSS பிரிவினரின் கொள்கைகள் இந்திய மக்களின் ஒற்றுமைக்குப் பெரும் ஆபத்தானது என்று கவலை
வெளியிட்டார். RSS பிரிவைச் சார்ந்த ஒருவரே காந்தியடிகளைக் கொன்றார் என்றும், அந்த
பிரிவினரோடு இணைந்துள்ள பாரதீய ஜனதா கட்சி தற்போது ஆட்சி நடத்துவது, அடிப்படைவாதக் கொள்கைகள்
இந்திய மண்ணில் வேரூன்றுவதற்கு எளிதாக வழிவகுக்கும் என்றும் அருள்பணி செட்ரிக் பிரகாஷ்
அவர்கள் எடுத்துரைத்தார்.