திருத்தந்தை : கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலுக்கு உள்ளார்ந்த புதுப்பித்தல் அவசியம்
அக்.24,2014. அகவாழ்வில் புதுப்பித்தலுக்குத் தயாராக இல்லாமலும், கிறிஸ்துவுக்கும் அவரின்
விருப்பங்களுக்கும் மிகுந்த பற்றுறுதியுடன் வாழ்வதற்கு ஆவல் கொள்ளாமலும் இருக்குமிடத்தில்
உண்மையான கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலுக்கு இடமில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
கூறினார். ஆர்த்தடாக்ஸ் சபையின் Kallistos அவர்களின் தலைமையில், கிறிஸ்தவ ஒன்றிப்புத்
திருப்பயணம் மேற்கொண்டுள்ள Orientale Lumen என்ற அமெரிக்க நிறுவனத்தின் 45 பிரதிநிதிகளை
இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார். கிறிஸ்துவில்
நம்பிக்கை கொள்ளும் அனைவருக்கும் மத்தியில் முழு ஒன்றிப்புக்கும், ஒப்புரவுக்கும் இட்டுச்செல்லும்
பாதையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு, அகவாழ்வில் புதுப்பித்தலை ஏற்படுத்துவது மிகவும்
இன்றியமையாதது என்றும் கூறினார் திருத்தந்தை. புனித திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம்
ஜான் பால் ஆகிய இருவரின் நினைவாக இக்கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பயணம் இடம்பெறுவது குறித்து
தனது மகிழ்வை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவைக்கும்
ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே நெருங்கிய உறவுகளை வளர்ப்பதற்கு இவ்விரு திருத்தந்தையரும்
பெருமளவில் பங்காற்றியுள்ளனர் என்றும் பாராட்டினார். தனது நவம்பர் மாத துருக்கிப்
பயணம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, உரோம் திருப்பீடத்துக்கும், கான்ஸ்டான்டிநோபிள்
திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் ஆழமான பிணைப்பின் அடையாளமாக உள்ளது இது என்றும் கூறினார்
திருத்தந்தை பிரான்சிஸ். Orientale Lumen நிறுவனம், கத்தோலிக்கத் திருஅவைக்கும் ஆர்த்தடாக்ஸ்
சபைக்கும் இடையே உரையாடலை ஊக்குவித்து வருகிறது.