கடும் ஏழ்மையை ஒழிக்கவேண்டுமெனில் சமத்துவமின்மை அகற்றப்படவேண்டும்
அக்.24,2014. உலகில் நிலவும் கடும் ஏழ்மையை ஒழிப்பதில் அனைத்துலக சமுதாயம் உண்மையாகவே
ஆர்வம் கொண்டிருந்தால், சமத்துவமின்மையை அகற்றுவதில் அது கவனம் செலுத்த வேண்டுமென வத்திக்கான்
உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார் ஏழ்மையை ஒழிப்பது குறித்து, ஐ.நா. தலைமையகத்தில்
இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர்
Bernardito Auza அவர்கள் இவ்வாறு கூறினார். வறுமையை அகற்றுவது என்பது, ஒரு மனிதரின்
அன்றாடச் செலவுக்குத் தேவையான நிதியை அதிகரிப்பது என்பதல்ல, மாறாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும்
இடையே, சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் இடையே நிலவும் ஏற்றுக்கொள்ள முடியாத இடைவெளியை
நீக்குவதாகும் என்றும் பேராயர் Auza அவர்கள் கூறினார். உலகின் பல பகுதிகளில் பெருமளவான
ஏழைகள், வறுமையின் சுமையை பல வழிகளில் அனுபவிக்கின்றனர் என்று தன் உரையில் சுட்டிக்காட்டிய
பேராயர் Auza அவர்கள், ஏழ்மை ஒழிப்பு நடவடிக்கைகள், முழுமனிதரின் உண்மையான வளர்ச்சியை
ஊக்குவிப்பதாய் அமைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.