திருத்தந்தை - தூய ஆவியாரின் அருளின்றி நம்மால் கிறிஸ்தவர்களாக வாழமுடியாது
அக்.23,2014. தூய ஆவியாரின் அருளின்றி நம்மால் கிறிஸ்தவர்களாக வாழமுடியாது என்று திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை ஆற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கினார். இயேசுவைக்
குறித்து தான் பெற்ற அனுபவத்தை எபேசியருக்கு எழுதியத் திருமுகத்தில் புனித பவுல் அடியார்
குறிப்பிட்டுள்ளதை மையப்படுத்தி, திருத்தந்தை இம்மறையுரையை வழங்கினார். கரையற்ற, எல்லையற்ற
கடலாக விரிந்திருக்கும் கடவுளின் அன்பைக் குறிப்பிடும் பவுல் அடியார், அந்த அன்பில் தன்னை
உறுதியாக்கும்படி இறைவனிடம் வேண்டியதை, திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார். சிறுமையிலும்,
சுயநலத்திலும் முடங்கிக் கிடக்கும் நமக்குமுன் பவுல் அடியார் தன் புகழுரையை வழங்குகிறார்
என்று கூறியத் திருத்தந்தை, இறைவனின் அன்பில் இணைவதற்கு, தூய ஆவியாரின் துணை அவசியமாகிறது
என்பதை வலியுறுத்தினார். மேலும், "ஒவ்வொரு குடும்பமும் சமுதாயம் என்ற கட்டிடத்தின்
செங்கலாக விளங்குகிறது. குடும்பத்தில்தான் நாம் மனிதர்களாக உருவாக்கப்படுகிறோம்" என்ற
வார்த்தைகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் வெளியிட்ட Twitter செய்தியாக
அமைந்தது.