'இஸ்லாமிய அரசை' முறியடிக்க கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இணைந்து
வரவேண்டும் - முதுபெரும் தந்தை சாக்கோ
அக்.23,2014. 'இஸ்லாமிய அரசு' என்ற அடிப்படைவாதப் போக்கை முறியடிக்க கிறிஸ்தவர்களும்
இஸ்லாமியரும் இணைந்து வரவேண்டும் என்ற அழைப்பை கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை
Raphael Louis Sako அவர்கள் விடுத்துள்ளார். வத்திக்கானில் அண்மையில் நடைபெற்ற உலக
ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் பங்கேற்ற முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், மிலான் நகரில்
நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றுகையில் இந்த அழைப்பை விடுத்தார். நெருங்கிவரும்
திருவருகைக் காலம், கிறிஸ்மஸ் விழாக்காலம் ஆகிய நாட்களில், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும்
ஒருவரை ஒருவர் சந்தித்து, தங்கள் மகிழ்வையும் ஒற்றுமை உணர்வையும் பகிர்ந்து கொள்வதால்
அடிப்படைவாதக் குழுக்களுக்கு மாற்று செய்திகளை வழங்க முடியும் என்று முதுபெரும் தந்தை
சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் தெருக்களுக்கு வந்து,
தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முயற்சிகளைப் பகிரங்கமாக்கினால், தாங்கள் அடிப்படைவாதக்
கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் பறைசாற்ற முடியும் என்று முதுபெரும் தந்தை
சாக்கோ அவர்கள் வலியுறுத்தினார். உண்மையான இஸ்லாமிய விழுமியங்களை ஆதரிக்கும் மக்கள்
இந்த துணிவான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளை தான் அடிக்கடி வெளிப்படுத்தி
வருவதாகவும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில்
குறிப்பிட்டார்.