2014-10-21 15:49:49

நம் விசுவாசம் உறுதியானதாக இருப்பதற்கு அது தொடர்ந்து இறைவார்த்தையால் பேணப்பட வேண்டும்


அக்.21,2014. “நம் விசுவாசம் உறுதியானதாகவும், வாழ்வுக்கு நலம்தருவதாகவும் இருக்கவேண்டுமெனில் அது தொடர்ந்து இறைவார்த்தையால் பேணப்பட வேண்டும்” என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிறரன்புப் பணிகளுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் வத்திக்கான் அருங்காட்சியகத்தில் இசைக் கச்சேரிகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வத்திக்கான் அருங்காட்சியக நிர்வாகிகளின் முயற்சியினால் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்வுகளில், மிக்கேல் ஆஞ்சலோவின் சிஸ்டீன் சிற்றாலயத்தில் இசைக் கச்சேரிகள், வழிகாட்டிகளின் உதவியுடன் அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்தல், அருங்காட்சியகத்திற்குள் விருந்துகள் போன்றவை உள்ளடங்கும்.
“பிறரன்புக் கலை” என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்நிகழ்வுகளின் முதல் கட்டமாக, கடந்த சனிக்கிழமையன்று புனித செசிலியா இசைப் பள்ளியின் குழு, இசை நிகழ்ச்சியை நடத்தியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.