பிரச்னைகளை ஆராய இன்னும் காலம் தேவை என்கிறது ஆயர் மாமன்ற தயாரிப்பு ஏடு
அக்.20,2014. குடும்பம் குறித்தவற்றில் பாரம்பரியக் கத்தோலிக்கப் படிப்பினைகளை வலியுறுத்தியுள்ள
ஆயர் மாமன்றத்தின் இறுதி அறிக்கை, மணமுறிவு செய்தவர்கள் மற்றும் திருஅவைக்கு வெளியே மறுமணம்
புரிந்தவர்களுக்குத் திருநற்கருணை வழங்குவது குறித்து ஆராய, மேலும் காலம் தேவைப்படுவதாக
அறிவித்துள்ளது. திருஅவைக்கு வெளியே மறுமணம் புரிந்தவர்கள் மற்றும் மணமுறிவு மேற்கொண்டவர்களுக்கு
திருநற்கருணை பெற அனுமதி வழங்குவது குறித்து இன்னும் ஆழமாக கருத்துப் பரிமாற்றங்கள் தேவைப்படுவதாக
கூறும் இவ்விறுதி அறிக்கை, ஒரே பாலின நோக்குடையவர்களுக்கு மேய்ப்புப்பணி அக்கறை காட்டவேண்டியதன்
அவசியத்தையும் எடுத்துரைக்கிறது. குடும்பம் தொடர்புடைய திருஅவைக் கோட்பாடுகள் தெளிவாக
வரையறுக்கப்பட வேண்டியதையும், அக்கோட்பாடுகளின்படி வாழ்வோருக்குச் சிறப்புக் கவனமும்
ஊக்கமும் வழங்கப்பட வேண்டியதையும் வலியுறுத்தியுள்ளது இந்த தயாரிப்பு ஏடு. வரும் ஆண்டு
அக்டோபரில் இடம்பெற உள்ள குடும்பம் குறித்த ஆயர் மாமன்றத்தின் தயாரிப்பாக உருவாக்கப்பட்டுள்ள
இவ்வேட்டில் உள்ளவை மீண்டும் ஆழமாக ஆராயப்படவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.