திருத்தந்தை : முளைகள் வளர இறைவன் உதவுவார் என்ற நம்பிக்கை உறுதிப்பாட்டை நாம் விதைக்கிறோம்
அக்.20,2014. நாம் விதைத்தவை முளைவிட்டு வளர இறைவன் உதவுவார் என்ற உறுதிப்பாட்டுடன் நாம்
தொடர்ந்து விதைத்துவருகிறோம் என திருத்தந்தை ஆறாம் பவுல் அருளாளராக அறிவிக்கப்பட்ட திருப்பலியில்
மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். 1963ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரை 15
ஆண்டுகள் திருஅவையை இவ்வுலகில் வழிநடத்திய திருத்த்னதை 6ம் பவுல் அவர்கள் அருளாளராக அறிவிக்கப்பட்டத்
திருப்பலியில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் கலந்துகொள்ள, அத்திருப்பலியில்
மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதியவை கண்டு இறைவன் அஞ்சுவதில்லை என்பதாலேயே
நமக்கும் எதிர்பாராத வழிகளைத் திறந்து நம்மை வழிநடத்துகின்றார் என்றார். காயங்களுக்குக்
கட்டுப்போடவும் நம்பிக்கை இழந்தவர்களுக்குப் புதிய நம்பிக்கைகளை ஊட்டவும் திரு அவை அழைப்புப்பெற்றுள்ளது
என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு அக்டோபரில் இடம்பெறும்
ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தை நோக்கி தூய ஆவி வழி நடத்துவார் என்ற நம்பிக்கையை வெளியிட்டார். ஆயர்
மாமன்றக்கூட்டங்களை உருவாக்கிய திருத்தந்தை 6ம் பவுல், காலத்தின் மற்றும் சமூகத்தின்
மாற்றங்களுக்கேற்ப, காலத்தின் அறிகுறிகளை உணர்ந்து நம் வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தியதையும் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.