எபோலா நோய்க்கட்டுப்பாட்டிற்கு நிதி கேட்டு ஐ.நா. விண்ணப்பம்
அக்.20,2014. ஆப்ரிக்காவின் லிபேரியா, சியேரா லியோன் மற்றும் கினி நாடுகளை பெருமளவில்
பாதித்துள்ள எபோலா நோய்க்கு எதிரான முயற்சிகளுக்கு போதிய நிதியுதவி கிட்டவில்லை என கவலையை
வெளியிட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன். கடந்த செப்டம்பர் மாதத்தில் நூறு
கோடி டாலர் நிதி திரட்டும் திட்டத்தைத் துவக்கி வைத்த ஐ.நா. பொதுச்செயலர், இதுவரை அத்திட்டத்திற்கு
ஒரு இலட்சம் டாலர் நிதியே கிட்டியுள்ளதாக அறிவித்தார். இந்த நிதி திரட்டும் திட்டத்திற்கு
இதுவரை இரண்டு கோடி டாலர்களுக்கே உறுதிமொழிகள் கிட்டியுள்ளன. வெகு அளவில் எபோலா நோயால்
பாதிக்கப்பட்டுள்ள லிபேரியா, சியேரா லியோன், கினி ஆகிய நாடுகள் மீது கவனம் செலுத்துவதுடன்,
அண்மை நாடுகளான ஐவரி கோஸ்ட், கினி பிசாவ், மாலி மற்றும் செனெகல் நாடுகளில் இந்நோய் பரவாமல்
இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என உலக நலவாழ்வு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.