உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் 14வது பொது அமர்வு
அக்.18,2014. குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் 14வது பொது அமர்வு இச்சனிக்கிழமை
காலை 9 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரசன்னத்தில் செபத்துடன் தொடங்கியது. இக்காலை
செபத்தை வழிநடத்திய வியட்னாம் நாட்டின் Thành-Phô Hô Chí Minh பேராயர் Paul Bùi Văn Đoc
அவர்கள், இயேசுவில் நம்பிக்கை வைத்தால் அவர் நமக்குச் சொல்லும் இறையன்பை வரவேற்போம்,
நாம் நற்செய்தி பற்றி வெட்கமடையக் கூடாது என்று கூறினார். இறைவன் கருணையுள்ளவர், ஏனெனில்
அவர் எல்லாம் வல்லவர், இறைவனின் வல்லமை அழிக்கும் வல்லமை அல்ல, ஆனால் அது வாழவைக்கும்
வல்லமை என்றுரைத்த வியட்னாம் பேராயர் Văn Đoc அவர்கள், நாம் இறைவனின் வல்லமையில் நம்பிக்கை
வைக்கிறோமா அல்லது உலகின் வல்லமையிலா என்ற கேள்வியையும் எழுப்பினார். உலகின் வல்லமை,
வாழ்வையும், அன்பையும், மனிதக் குடும்பங்களையும் என அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறது,
ஆனால் விசுவாச வாழ்வு, மகிழ்வின் ஊற்றாகிய அன்பு வாழ்வில் அமைந்துள்ளது என்றும் மறையுரையாற்றினார்
பேராயர் Văn Đoc. இந்த 14வது பொது அமர்வில் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் இறுதித்
தொகுப்பு குறித்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாதம்
5ம் தேதி திருப்பலியுடன் தொடங்கி வைத்த, குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தை,
இஞ்ஞாயிறன்று திருப்பலி நிகழ்த்தி நிறைவுசெய்கிறார்.