2014-10-17 15:50:25

எபோலா நிதியுதவிக்கு ஐநா அவசர வேண்டுகோள்


அக்.17,2014. மேற்கு ஆப்ரிக்க நாடுகளான கினி, சியெரா லியோன், மற்றும் லைபீரியாவில் எபோலா கொள்ளை நோய்ப் பாதிப்பு தொடர்ந்து மோசமடைந்துவருவதால், இந்நோயை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்கு அனைத்துலக சமுதாயம் தனது ஆதரவை அதிகரிக்குமாறு பான் கி மூன் அவர்கள் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நோயை மேலும் பரவாமல் தடுத்து நிறுத்துவதற்கு கடந்த செப்டம்பரில் ஆரம்பிககப்பட்ட நூறுகோடி டாலர் நிதி திரட்டும் திட்டத்திற்கு இதுவரை ஒரு இலட்சம் டாலர்களே சேர்ந்துள்ளன என்று கூறியுள்ளார் பான் கி மூன்.
எபோலாவால் பாதிக்கப்பட்ட மக்களில் குறைந்தது 70 விழுக்காட்டினராவது வருகிற டிசம்பருக்குள் போதிய சிகிச்சை பெறவும், இந்நோயால் இறந்தவர்களைப் புதைப்பதில் தொற்றுக் கிருமிகள் பரவாமல் இருப்பதை 70 விழுக்காடாவது தடைசெய்யவும் நிதி உதவிகள் தேவைப்படுகின்றன எனவும் கூறியுள்ளார் பான் கி மூன்.
எபோலா நோயால் இதுவரை ஏழு நாடுகளில்(கினி, சியெரா லியோன், லைபீரியா, நைஜீரியா, செனெகல், இஸ்பெயின், அமெரிக்க ஐக்கிய நாடு) 8,997 பேர் தாக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 4,493 பேர் இறந்துள்ளனர் என ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.