அக்.17,2014. உலக உணவு தினத்திற்கென செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்
அவர்கள், உலகளவில் பசியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் முக்கிய அங்கம் வகிக்கும் விவசாயக்
குடும்பங்கள் தங்களின் இப்பணியை மேலும் அதிகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். நலவாழ்வு
வசதிகள், சத்துணவு போன்றவை கிடைக்காமல் இன்னும் 80 கோடிக்கு மேற்பட்ட மக்கள் துன்புறும்வேளை,
உறுதியான எதிர்காலத்தை அமைக்கும் புதிய திட்டத்தை வடிவமைப்பதற்கு விவசாயக் குடும்பங்கள்
உதவ முடியும் எனக் கூறியுள்ளார் பான் கி மூன். இவ்வாண்டின் இவ்வுலக தின மையப்பொருள்,
அனைத்துலக குடும்ப விவசாய ஆண்டோடு ஒத்திணங்கி வருவதைக் குறிப்பிட்டுள்ள பான் கி மூன்
அவர்கள், உலகில் பசியை முற்றிலும் அகற்றுவதற்குக் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதையும்
சுட்டிக்காட்டியுள்ளார். 1945ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியன்று ஐ.நா.வின் உணவு மற்றும்
வேளாண்மை நிறுவனமான FAO தொடங்கப்பட்டது. இந்நாளை நினைவுகூரும்விதமாக, அக்டோபர் 16ம் தேதியன்று
ஆண்டுதோறும் உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.