2014-10-16 15:58:50

ஐஆர்என்எஸ்எஸ் 1சி செயற்கைக் கோளை ஏவியது இந்தியா


அக்.16,2014. கடல்வழிப்பாதை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிக்கான செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி (IRNSS 1C) யுடன், பிஎஸ்எல்வி சி.26 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 1.32 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு, சாலை போக்குவரத்து ஆகியவற்றை கண்காணிக்கவும், ஜி.பி.எஸ் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 2013 ஜூலை 1-ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-ஏவும், கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-பியும் விண்ணில் செலுத்தப்பட்டன.
மூன்றாவது செயற்கைக் கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-26 ராக்கெட் மூலம் வியாழக்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட இருபதாவது நிமிடத்தில் இந்த செயற்கைக்கோள், சரியான புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் எடை 1,425.4 கிலோவாகும். இந்த செயற்கைக் கோளின் ஆயுள் பத்து ஆண்டுகள்.
2015ஆம் ஆண்டுக்குள் ஏழு செயற்கைக்கோள்களையும் ஏவி, இந்த திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ திட்டமி்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த செலவு 1420 கோடி ரூபாயாகும்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி செயற்கைக்கோள் கடல்வழிப்பாதை, பேரிடர் மேலாண்மை, வாகனங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவும். இந்த செயற்கைக்கோள் விண்ணில் உள்ள புவி வட்ட பாதையில், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிமீ தூரத்திலும், அதிகபட்சமாக 20,650 கிமீ தூரத்திலும் நிலைநிறுத்தப்படவுள்ளது.

ஆதாரம் : The Hindu








All the contents on this site are copyrighted ©.