2014-10-16 15:58:27

"ஆறாம் பால் அவர்களுக்கு வணக்கம்" என்ற தலைப்பில் வத்திக்கானில் துவங்கும் கண்காட்சி


அக்.16,2014. அக்டோபர் 19, வருகிற ஞாயிறன்று திருத்தந்தை ஆறாம் பால் அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்வையொட்டி, அக்டோபர் 18, இச்சனிக்கிழமையன்று "ஆறாம் பால் அவர்களுக்கு வணக்கம்" என்ற தலைப்பில் கண்காட்சியொன்று வத்திக்கானில் துவங்கவுள்ளது.
திருத்தந்தை ஆறாம் பால் அவர்கள் உருவம் பதித்த தபால் வில்லைகள், நாணயங்கள் அடங்கிய இந்தக் கண்காட்சி, வத்திக்கானில் உள்ள ஆறாம் பால் பன்னாட்டு நூலகத்தில் அக்டோபர் 18ம் தேதி முதல், அக்டோபர் 25ம் தேதி முடிய மக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும்.
1963ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு முடிய திருஅவையின் தலைவராக பணியாற்றிய திருத்தந்தை ஆறாம் பால் அவர்களை மையப்படுத்திய சில நூல்களும், அரிய புகைப்படங்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும் என்று வத்திக்கான் நூலகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.