அக்.15,2014. கைகளைக் கழுவும் பழக்கம், எபோலா நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் முக்கியமான
ஒன்றாக உள்ளது என ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யூனிசெப் கூறியது. சோப்பினால் கைகளைக்
கழுவுதல், நோய்க்கிருமிகள் தாக்கத்திலிருந்தும், சளிப்பிடிப்பதிலிருந்தும் பாதுகாக்கிறது,
இது ஓர் எளிய, செலவுகுறைந்த முறைகளில் ஒன்று என்று யூனிசெப் நிறுவனத்தின் தண்ணீர் மற்றும்
நலவாழ்வுப் பிரிவின் தலைவர் Sanjay Wijesekera அவர்கள் கூறினார். அக்டோபர் 15, இப்புதனன்று
கடைப்பிடிக்கப்பட்ட உலக கைகழுவும் தினத்தையொட்டி இவ்வாறு கூறிய Wijesekera அவர்கள், எபோலாவால்
பாதிக்கப்பட்ட சியெரா லியோன் நாட்டிற்கு 15 இலட்சம் சோப்புகளையும், லைபீரியாவுக்கும்,
கினி நாட்டுக்கும் இலட்சக்கணக்கான சோப்புகளையும் யூனிசெப் நிறுவனம் விநியோகித்திருப்பதாகத்
தெரிவித்தார். 2013ம் ஆண்டில், 5 வயதுக்குட்பட்ட 3 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட
சிறார் வயிற்றுப்போக்கால் இறந்தனர். இவ்விறப்பு ஒரு நாளைக்கு ஆயிரம் என்ற விகிதத்திலும்
இடம்பெற்றது என யூனிசெப் கூறியது. சுத்தமற்ற நீர், அடிப்படை நலவாழ்வு வசதியின்மை
போன்றவையே வயிற்றுப்போக்கு நோய்க்கு முக்கிய காரணங்களாகும்.