மத்திய கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு செபம் ஒன்றே ஆதாரம்
அக்.14,2014. வன்முறை மற்றும் பேரழிவுகள் மத்தியில் வாழ்ந்துவரும் மத்திய கிழக்குப் பகுதியில்,
செபம் ஒன்றே கிறிஸ்தவக் குடும்பங்களை வாழவைத்து வருகின்றது என்று ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை
முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார். மத்திய கிழக்குப் பகுதியில்
குடும்பங்கள் என்ற தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய முதுபெரும் தந்தை சாக்கோ
அவர்கள், ஒருதாரத் திருமணங்களை நடைமுறைப்படுத்தாத முஸ்லிம்களுக்கு கிறிஸ்தவக் குடும்பங்கள்
எடுத்துக்காட்டாய் உள்ளன என்று தெரிவித்தார். ஐஎஸ் இஸ்லாம் நாட்டின் தீவிரவாதிகளின்
காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு மத்தியிலும், கிறிஸ்தவர்கள் நற்செய்திகூறும் அறிவுரைகளுக்குச்
சாட்சிகளாய் வாழ்ந்துவருகின்றனர் என்றும் கூறிய முதுபெரும் தந்தை, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன்
எல்லா முஸ்லிம்களும் இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டுமெனவும் கூறினார். மேலும்,
இக்கருத்தரங்கில் உரையாற்றிய சிரியாவின் அந்தியோக் முதுபெரும் தந்தை 3ம் இக்னேஷியஸ் யூசிப்
யூனென் அவர்கள், கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் 1,40,000 சிரியா நாட்டுக் கிறிஸ்தவர்கள் மோசுல்
நகரைவிட்டு வெளியேறி குர்திஸ்தான் பகுதியில் தஞ்சம் தேடியுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டார்.