அக்.14,2014. விசுவாசம் என்பது அழகூட்டும் பொருள் மட்டுமல்ல, அது செயல்திறன்மிக்க பிறரன்பாகும்
என்று இச்செவ்வாய் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய
திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். உணவு அருந்து முன்பு செய்யவேண்டிய
சடங்குகளை தான் செய்யாததால், தன்னை விருந்துக்கு அழைத்த பரிசேயரை இயேசு வியப்பில் ஆழ்த்தியது
பற்றி விளக்கும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை
இவ்வாறு கூறினார். உண்மையான கிறிஸ்தவ வாழ்வு பற்றி விளக்கிய திருத்தந்தை, வெளிப்படையாய்த்
தெரியாமல் இரகசியமாகச் செய்யப்படும் தீய பழக்கங்களை வாழ்வில் கொண்டு, அதேவேளை, பொதுவில்
நல்ல மனிதர்களாகத் தங்களைக் காண்பிக்கும் மக்களை இயேசு கண்டிக்கிறார் என்றும் கூறினார். இவ்வாறு
வாழும் பரிசேயர்களை இயேசு, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்று அழைப்பதைக் குறிப்பிட்ட
திருத்தந்தை, நாம் விசுவாச அறிக்கையைச் சொல்வது மட்டும் விசுவாசம் அல்ல, செயலில் வெளிப்படாத
விசுவாசம் தேங்கிக் கிடக்கும் விசுவாசம், மாறாக, பிறரன்பு வழியாக வெளிப்படும் விசுவாசமே
உண்மையானது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். நம் விசுவாசம் அன்பில் செயலூக்கத்துடன்
விளங்குகிறதா என்ற கேள்வியை எழுப்பியதோடு, நாம் பிறரன்புச் செயல்களைப் பறையறிவித்துக்கொண்டு
செய்யக்கூடாது என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.