குடும்பம் குறித்த ஆயர் மாமன்ற டுவிட்டர் செய்திகள் பிரபலம்
அக்.13,2014. தற்போது திருப்பீடத்தில் இடம்பெற்றுவரும் குடும்பம் குறித்த ஆயர்கள் மாமன்றக்
கூட்டத்தில் கடந்தவாரத்தில் மட்டும் உடனுக்குடன் 1400 டுவிட்டர் செய்திகள் வெளியிடப்பட்டதாக
திருப்பீட தகவல் தொடர்பு அலுவலகம் அறிவிக்கிறது. மாமன்றக் கூட்டத்தில் திருஅவைத் தந்தையர்கள்
வெளியிட்ட கருத்துக்கள் குறித்து உடனுக்குடன் டுவிட்டர் தளம் வழி ஆங்கிலம், இஸ்பானியம்,
இத்தாலியம் என மூன்று மொழிகளில் 1,400 செய்திகள் வெளியிடப்பட்டதாகவும், இதைப் பார்ப்பவர்களின்
எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து 17 இலட்சத்தைத் எட்டியுள்ளதாகவும் கூறியது இந்த அலுவலகம். மாமன்றம்
கூடுவதற்கு முன்னர் இருந்த எண்ணிக்கையைவிட தற்போது 6,390 பேர் அதிகமாகியுள்ளதாகவும்,
6,077 பேர் பதில் வழங்கியுள்ளதாகவும் கூறும் திருப்பீட தகவல் தொடர்பு அலுவலகம், இதில்
27 விழுக்காட்டினர் அமெரிக்க ஐக்கிய நாட்டினர் எனவும், 14 விழுக்காட்டினர் இத்தாலியர்
எனவும், 7 விழுக்காட்டினர் இஸ்பானியர் எனவும் கூறுகிறது. இங்கிலாந்து, மெக்சிகோ,
அர்ஜன்டீனா, கானடா, பிரான்ஸ், வெனெசுவேலா ஆகிய நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினோர்
மாமன்றத் தந்தையர்களின் டுவிட்டர் செய்திகளைப் பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.