அமெரிக்க அரசுத்தலைவர்
ஜான் கென்னடி, வெள்ளை மாளிகையில் ஒரு முறை சிறப்பு விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
அமெரிக்காவில் கலைத்துறையில் மிகவும் புகழ் பெற்றவர்களை மட்டும் அந்த விருந்துக்கு அழைத்திருந்தார்.
அவர்களில், வயதில் முதிர்ந்த William Faulkner என்பவரும் ஒருவர். இவர் ஒரு தலை சிறந்த
எழுத்தாளர். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என்று பல வடிவங்களில் எழுதி புகழ்பெற்றவர்.
அரசுத்தலைவர் கென்னடியிடமிருந்து வந்திருந்த அந்த அழைப்பைக் கண்டதும், வில்லியம் அவர்கள்,
"எனக்கு அதிக வயதாகிவிட்டது. எனவே, புது நண்பர்களை உருவாக்க எனக்கு விருப்பமில்லை" என்று
பதில் சொல்லி, அந்த அழைப்பை மறுத்துவிட்டார். இப்படி ஓர் அரிய வாய்ப்பை வில்லியம்
மறுத்துவிட்டாரே என்று நாம் எண்ணலாம். அழைப்பை ஏற்க மறுத்ததற்கு அவர் சொன்ன காரணம் நமக்கு
எரிச்சல் மூட்டலாம். வில்லியம் அவர்களைப்பற்றி நம் தீர்ப்புகளை எழுதுவதற்கு முன், நம்மைப்பற்றி
கொஞ்சம் சிந்திப்போமே. வாழ்வில் நமக்கு வந்துள்ள அழைப்புக்கள், அந்த அழைப்புக்களுடன்
நமக்குக் கிடைத்த வாய்ப்புக்கள் எத்தனை, எத்தனை... இந்த அழைப்புக்களையும் வாய்ப்புக்களையும்
ஏற்க மறுத்து, நாம் கூறிய சாக்கு போக்குகள் எத்தனை, எத்தனை... இவற்றைச் சிந்திக்க இன்றைய
ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. இந்த அழைப்பை ஏற்போமா? இறைவன் தரும் விருந்துக்கு
விடுக்கப்படும் அழைப்பும், அழைப்பை மறுத்து சொல்லப்படும் சாக்குபோக்குகளும் இன்றைய வாசகங்களின்
மையக் கருத்துக்கள். இறைவன் தரும் ஒரு விருந்தை, இறைவாக்கினர் எசாயா விவரிக்கும்போது,
முதலில் அங்கு பரிமாறப்படும் உணவு வகைகளைப் பட்டியலிடுகிறார். மேலோட்டமாகப் பார்த்தால்,
இவை வெறும் உணவுப் பொருட்களின் பட்டியலைப் போல் தெரிகிறது. ஆனால், இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்து
வந்த அடிமை வாழ்வை நினைத்துப் பார்த்தால், இந்தப் பட்டியல் அவர்கள் ஏங்கித் தவித்த ஒரு
விடுதலை வாழ்வின் அடையாளங்கள் என்பது புரியும். அடுத்த நாள் அல்லது, அடுத்த வேளை
உணவு வருமா என்பதே தெரியாமல், ஏங்கித் தவிக்கும் ஏழைகள் எப்படிப்பட்ட உணவு தங்களுக்குக்
கிடைக்கும், அது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதையெல்லாம் சிந்திப்பது கிடையாது. வகை
வகையாய் உணவருந்தும் செல்வந்தர் மனதில் இந்தச் சிந்தனைகளெல்லாம் உருவாகும். பல நூற்றாண்டுகளாய்
அடிமைகளாய், அகதிகளாய், நாடோடிகளாய் வாழ்ந்துவந்த இஸ்ரயேல் மக்கள் உண்டதெல்லாம் பரிதாபமான
ரொட்டித் துண்டுகளும், கீரைத் தண்டுகளுமே. மிருகங்களுக்குத் தரப்படுவதுபோல் பெரும் பாத்திரங்களில்
அல்லது பாய்விரிப்பில் கொட்டப்படும் உணவை, இந்த அடிமைகள் உண்ணவேண்டும், அதுவும் ஒருவரோடு
ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு உண்ண வேண்டும். பொறுமையாய், நாகரீகமாய் காத்திருந்தால்
ஒன்றும் கிடைக்காது. இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு துண்டு ரொட்டிக்காக போராட வேண்டியிருந்த
இஸ்ரயேல் மக்கள், ஆற அமர நாற்காலிகளில் அமர்ந்து, விருந்துண்பது எப்படி என்பதையே மறந்திருந்தனர்.
அவர்களிடம் இறைவன் தரும் விருந்தைப் பற்றி இறைவாக்கினர் எசாயா இவ்விதம் கூறுகிறார்: இறைவாக்கினர்
எசாயா 25: 6 படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு
விருந்தை ஏற்பாடு செய்வார்: அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான
இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். இறைவாக்கினர்
எசாயா இந்த வாசகத்தில் குறிப்பிட்டிருக்கும் திராட்சை இரசத்தைக் கொஞ்சம் சிந்தித்துப்
பார்ப்போம். எசாயா குறிப்பிடும் “வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசத்தை” உருவாக்க
நேரமும், கவனமும் தேவை. நல்ல சுவையான திராட்சை இரசத்தை விருந்து நேரத்தில் பரிமாறுவதே
ஒரு பெருமை. இந்தப் பெருமை பறிபோய்விடுமோ என்ற கவலையில் அன்னை மரியா கானாவூர் திருமணத்தின்போது
இயேசுவை அணுகிய அந்தச் சம்பவம் நமக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். நேரம் எடுத்து,
கவனம் செலுத்தி உணவுப் பொருட்களையோ திராட்சை இரசங்களையோ தயாரிக்கும் அந்தப் பழக்கத்தையே
பல நூற்றாண்டுகளாய் இழந்து தவித்தனர் இஸ்ரயேல் மக்கள். சுவையுள்ள திராட்சை இரசத்துடன்
விருந்து கொடுத்து பெருமை கொண்ட காலங்களெல்லாம், அவர்களுக்கு, தூரத்துக் கனவுகளாக இருந்தன.
இவ்விதம் தவித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு, எசாயா கூறும் இந்த உணவுப் பட்டியலே தங்கள்
பாரம்பரியப் பெருமையை எண்ணிப்பார்க்க ஒரு வாய்ப்பைத் தந்திருக்கும். அல்லது, வரப்போகும்
விடுதலை வாழ்வைப் பற்றிய நம்பிக்கையை, அவர்கள் உள்ளங்களில் வளர்த்திருக்கும். விருந்தையும்,
உணவுப் பட்டியலையும் இவ்வளவு விரிவாக நாம் சிந்திக்க வேண்டுமா என்ற எண்ணம் உங்களுக்கு
எழலாம். அதற்கு காரணம் உண்டு அன்பர்களே. அன்று தங்கள் சுய மரியாதையெல்லாம் இழந்து, உணவுக்காகப்
போராடிய இஸ்ரயேல் மக்களைப் போல, நாம் வாழும் இன்றையச் சூழலிலும் உணவுக்காகப் போராடும்
பல கோடி மக்களை எண்ணிப் பார்க்க இன்றைய வாசகங்கள் நமக்கு ஓர் அழைப்பைத் தருகின்றன. தூக்கியெறியும்
கலாச்சாரம் நம்மில் எவ்வளவு பாதகமான விளைவுகளை உருவாக்கியுள்ளது என்பது குறித்து, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தன் உரைகளில் அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார். நாம் உணவைத் தூக்கியெறியும்
போக்கைக் குறித்துப் பேசுகையில், சற்று கடினமான வார்த்தைகளையே பயன்படுத்தினார் திருத்தந்தை.
உலகில் கோடான கோடி மக்கள் உணவின்றி தவிக்கும் வேளையில், "உணவை, குப்பையில் எறிவது, ஏழைகளுக்கும்,
பசித்திருப்போருக்கும் போய்ச் சேரவேண்டிய உணவைத் திருடுவதற்குச் சமம்" என்று (ஜூன் 5,
2013) தன் புதன் பொது மறையுரையில் குறிப்பிட்டார். உலகின் பல நாடுகளில், குறிப்பாக
ஆப்ரிக்க நாடுகளில், பசியின் கொடுமையால் தங்கள் மனிதத்தன்மையை இழந்து, மிருகங்களைப்போல்,
அல்லது மிருகங்களிலும் கேவலமாக வாழ்வோரை எண்ணிப்பார்க்க... அவர்கள் மீண்டும் மனிதர்களாக
வாழ்வதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதை எண்ணிப் பார்க்க, முன்னாள் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதே அழைப்பை இன்றைய ஞாயிறு வாசகங்களும் நமக்கு விடுக்கின்றன. இந்த அழைப்பை ஏற்பதும்,
மறுப்பதும் நம் பொறுப்பு. ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சியும், வறுமையும், பட்டினிச்
சாவுகளும் நாம் பல ஆண்டுகளாகக் கேட்டு வரும் ஒரு செய்தி என்பதால், அது நம் உள்ளத்தைத்
தொடாமல் போக வாய்ப்பு உண்டு. இவற்றை அடிக்கடி நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்துப்
பார்த்து அலுத்துப் போயிருப்போம் இல்லையா? "வறுமையும், பட்டினியும் இந்த உலகில் எல்லா
இடங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. என்னால் என்ன செய்ய முடியும்?" என்று இந்தப் பிரச்சனையை
அலட்சியப்படுத்தும் ஆபத்து அதிகம் உண்டு. இப்படி அலட்சியப்படுத்தியவர்களைப்பற்றி இயேசு
இன்றைய நற்செய்தியில் குறிப்பிடுகிறார். அரசன் தந்த அழைப்பை ஏற்க மறுத்து, தங்கள் வயல்களிலும்,
கடைகளிலும் பணிகள் செய்யப்போன மனிதர்களை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம். அதேபோல்,
ஆப்ரிக்காவின் பட்டினிச் சாவுகள் மூலம் நமக்கு வரும் அழைப்புக்களையும் நாம் ஒதுக்கி வைத்துவிட்டு,
நம் பணிகளில், நம் சொந்த வாழ்வில் மீண்டும் மூழ்கி விடும் ஆபத்து நமக்கும் உண்டு. ஆப்ரிக்க
நாடுகளின் பட்டினிச் சாவுகளைப் பற்றிப் பேசும்போது, முன்னர் வாசித்த ஒரு செய்தி நினைவுக்கு
வருகிறது. இந்தப் பட்டினி சாவுகளால் சிறிதும் பாதிக்கப்படாமல், தனக்கு விடப்பட்ட பணியை
மட்டும் செய்துவிட்டுத் திரும்பிய ஒரு புகைப்படக் கலைஞரைப் பற்றிய செய்தி அது. ஒவ்வோர்
ஆண்டும் மனித சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி எடுக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது நாளிதழ்களில்
வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றில் சிறந்த படத்திற்கு Pulitzer என்ற விருது வழங்கப்படும்.
1994ம் ஆண்டு இந்த விருதைப் பெற்ற புகைப்படம் சூடான் நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்.
அங்கு நிலவிய பட்டினிக் கொடுமையை விளக்கும் ஒரு படம். இந்தப் படத்தில் எலும்பும் தோலுமான
ஒரு நான்கு வயது பெண் குழந்தை தரையில் ஊர்ந்து செல்வதாகக் காட்டப்பட்டிருந்தது. பல நாட்கள்
பட்டினி கிடந்ததால், எழுந்து நடக்கும் சக்தியை இழந்திருந்த அந்தக் குழந்தை, அருகிலிருந்த
ஒரு உணவுதரும் மையத்திற்கு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்குப் பின்புறம்
பத்தடி தள்ளி ஒரு பிணம்தின்னும் கழுகு அமர்ந்திருந்தது. அந்தக் குழந்தை எப்போது இறந்து
விழும், தன் விருந்தை ஆரம்பிக்கலாம் என்று அந்தக் கழுகு காத்திருந்தது. சூடானில் மனிதர்கள்
உணவின்றி இறந்து வந்ததால், பிணம் தின்னும் கழுகுகளுக்கு பெருமளவு உணவு கிடைத்தது என்பதை
அந்தப் படம் சொல்லாமல் சொன்னது. விருது பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் Kevin Carter
என்ற 33 வயது இளைஞர். ஐ.நா.அமைப்பு சூடானில் மேற்கொண்ட பணிகளைப் படம் எடுப்பதற்காகச்
சென்றவர் அவர். அவருக்கு Pulitzer விருது கிடைத்த அன்று, பலர் அவரிடம் “அந்தக் குழந்தைக்கு
என்ன ஆனது?” என்று கேட்டார்கள். அவர் பதிலுக்கு, "நான் அந்தப் படத்தை எடுத்தபின், கழுகை
விரட்டிவிட்டு அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டேன். அந்தக் குழந்தைக்கு என்ன ஆனது என்று
எனக்குத் தெரியாது." என்று சொன்னார். அவர் சொன்ன இந்தப் பதிலைக் கேட்டபின், ஒரு நாளிதழ்
Kevin Carterஐப் பற்றி பின்வருமாறு எழுதியிருந்தது: "குழந்தைக்கு இந்தப் பக்கம் அமர்ந்து
படம் எடுத்த இவருக்கும், குழந்தைக்கு அந்தப்பக்கம் அமர்ந்திருந்த அந்தப் பிணம் தின்னும்
கழுகுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை." விருது பெற்ற இந்தப் புகைப்படத்தினால் அவர் பெற்ற
கண்டனங்கள் Kevin Carterன் மனதை உடைத்தன. விருதுபெற்ற அதே ஆண்டு அவர் தற்கொலை செய்துகொண்டார்.
பசி, பட்டினி, வறுமை இவைகளை நாம் எவ்விதம் நோக்குகிறோம்? பட்டினிச் சாவுகள் நமக்கு
வெறும் புள்ளி விவரங்களா? தினசரி செய்திகளா? காட்சிப் பொருள்களா அல்லது இவை அனைத்தும்
இறைவன் நமக்குத் தரும் சிறப்பான அழைப்புக்களா? நான், எனது என்ற சிறைகளிலிருந்து வெளியேறுவதற்கு
இறைவன் நமக்குத் தரும் அழைப்புக்களை ஒதுக்கிவிட்டு, மறுத்துவிட்டு, நம் அன்றாட வாழ்வில்
மட்டும் கவனம் செலுத்துவது வலியச் சென்று நம்மையே மீண்டும் தன்னலச் சிறைகளுக்குள் அடைத்துக்
கொள்ளும் வழிகள். இறைவன் தரும் இந்த அழைப்பைவிட நம் தனிப்பட்ட, தினசரி வாழ்வே பெரிது
என்று எத்தனை முறை நாம் வாழ்ந்திருக்கிறோம்? அந்த அழைப்பின் வழி வந்த நல்ல எண்ணங்களை
எத்தனை முறை கொன்று குழிதோண்டி புதைத்திருக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இன்றும், இனி
வரும் நாட்களிலும் பதில்கள் தேடுவது நமக்கு மீட்பைத் தரும்.
ஞாயிறு சிந்தனை நிகழ்ச்சியை
உங்களுக்கு வழங்கியது வத்திக்கான் வானொலி.