அக்.10,2014. திருமண விலக்கு குறித்த நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்யும் விவகாரத்தில்,
நீதியை ஒருபுறமும், கருணையை மறுபுறமும் வைத்துப் பேசுவது நல்ல பாதையல்ல என்று குடும்பம்
குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் ஒரு கருத்துச் சொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்
கானடாவின் Gatineau பேராயர் Paul-André Durocher. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு
மாமன்றத்தின் இவ்வியாழன் நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கிய
பேராயர் Durocher, திருமண முறிவுபெற்ற மற்றும் மறுதிருமணம் செய்துகொண்டவர்களுக்குத் திருநற்கருணை
வழங்காதது பற்றிக் கருத்துக் கூறியவர்கள் இவ்வாறு கூறியதாகத் தெரிவித்தார். 181 மாமன்றத்
தந்தையர் கலந்துகொண்ட இவ்வியாழன் மாலை பொது அமர்வில், குடியேற்றம் மற்றும் குடும்பங்களுக்கிடையேயுள்ள
உறவுகள் பற்றியும் பேசப்பட்டது. இப்புதன் மாலை மற்றும் இவ்வியாழன் காலை பொது அமர்வுகளில்
ஏறக்குறைய 50 பேர் பேசியுள்ளனர் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.