சிறுபான்மை மதத்தவர்க்கெதிரான வன்முறைகள் சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்
அக்.10,2014. இந்தியாவில் சிறுபான்மை மதத்தவர்க்கெதிராய்த் தூண்டிவிடப்படும் வெறுப்பும்
வன்முறையும் நிறுத்தப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு மத்திய அரசையும்,
பல மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளனர் இயேசு சபையினர். சிறுபான்மை மதத்தவர்க்கெதிரான
வெறுப்பு மற்றும் வன்முறைச் செயல்கள் பல நகரங்களிலும் கிராமங்களிலும் சமூக நல்லிணக்கத்துக்கு
எதிர்மறை தாக்கங்களை முன்வைக்கின்றன என்றும் இந்திய இயேசு சபையினர் கூறியுள்ளனர். "Jesa"
என்ற இயேசு சபை சமூகப்பணி அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.
2014ம் ஆண்டு மே மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கிடையே 600க்கு அதிகமான சிறுபான்மையினர்க்கெதிரான
வன்முறைகள் நடந்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்களையும் இக்கூட்டத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.