2014-10-10 16:12:03

சண்டைகளினால் துன்புறும் குடும்பங்களுடன் மாமன்றத்தந்தையர் ஒருமைப்பாடு


அக்.10,2014. உலகில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டைகளினால் கடும் துன்பங்களை அனுபவித்துவரும் குடும்பங்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து தங்களின் ஆழ்ந்த ஒருமைப்பட்டுணர்வைத் தெரிவிப்பதாக, மாமன்றத் தந்தையர் கூறியுள்ளனர்.
வத்திக்கானில் இம்மாதம் 5ம் தேதி தொடங்கியுள்ள 3வது உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் தந்தையர், போர்களால் துன்புறும் குடும்பங்களுக்கென இவ்வெள்ளியன்று வெளியிட்ட செய்தியில், சிரியா மற்றும் ஈராக்கிய குடும்பங்களைச் சிறப்பாக நினைவுகூர்ந்துள்ளனர்.
தங்களின் மத நம்பிக்கைக்காக, எல்லா உடைமைகளையும் விட்டுவிட்டு எதிர்காலம் பற்றிய எவ்வித உறுதியும் இல்லாமல் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ள சிரியா மற்றும் ஈராக்கிய கிறிஸ்தவ மற்றும் பிற சமய-இன சமூகங்களை நினைத்து இறைவனிடம் செபிப்பதாக மாமன்றத் தந்தையரின் செய்தி கூறுகிறது.
குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் ஐந்தாவது நாளை இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள மாமன்றத் தந்தையர், வன்முறையில் ஈடுபட எவரும் கடவுளின் பெயரைப் பயன்படுத்த முடியாது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சண்டைகளினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவி செய்யும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அதேவேளை, சிரியாவிலும், ஈராக்கிலும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும், இன்னும், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள உலகின் பிற பகுதிகளிலும் அமைதியான நல்லிணக்க வாழ்வை மீண்டும் உருவாக்குவதற்கு அனைத்துலக சமுதாயம் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர் மாமன்றத் தந்தையர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.