அக்.04,2014. “நற்செய்தியில் இயேசு மார்த்தாவிடம் சொன்னதுபோல ஒரு காரியம் அவசியமானது,
அது செபம். உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக எங்களோடு சேர்ந்து செபியுங்கள்”என்ற வார்த்தைகளை,
இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும்,
இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி குடும்பம்
குறித்த இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தைத் தொடங்கிவைக்கிறார் திருத்தந்தை. இஞ்ஞாயிறு
உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்குத் தொடங்கும் இத்திருப்பலியை உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையரும்
திருத்தந்தையுடன் சேர்ந்து நிறைவேற்றுவார்கள். இன்னும், இந்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்காகச்
செபிப்பதற்காக, இச்சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இத்தாலிய
ஆயர் பேரவை ஏற்பாடு செய்துள்ள செப வழிபாட்டில் கலந்துகொள்கிறார் திருத்தந்தை. இத்திருவழிபாட்டில்
இத்தாலியின் பல பாகங்களிலிருந்து தம்பதியர் தங்களின் சாட்சிய வாழ்வைப் பகிர்ந்துகொள்வது
நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளது.