40 வருடங்களில் பாதியாய்க் குறைந்தது உலக விலங்குகள் எண்ணிக்கை
அக்.02,2014. உலகில் வனவாழ் உயிர்களின் எண்ணிக்கை கடந்த நாற்பது வருடங்களில் பாதிக்கும்
அதிகமாகக் குறைந்துவிட்டது என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. பாலூட்டி விலங்குகள்,
பறவைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்குகள், மீன்கள் போன்றவற்றின் எண்ணிக்கை இதுவரை
கருதப்பட்டதைவிட மோசமாகக் குறைந்துபோயுள்ளதாக அனைத்துலக வனவிலங்கு நிதி நிறுவனம் கூறுகிறது. இந்த
எண்ணிக்கை வீழ்ச்சிக்கு மனிதச் செயல்களே காரணம் என அது குற்றஞ்சாட்டியுள்ளது. விலங்குகளின்
வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, அவற்றின் வாழ்க்கை ஆதாரங்களான இயற்கை வளங்கள் வேகமான அளவில்
அழிக்கப்பட்டுவருவதும் இந்நிலைக்கு காரணம் என இந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆப்ரிக்காவின்
காட்டு யானைகள், கடல்வாழ் ஆமைகள் போன்றவை மிக அதிகமான எண்ணிக்கை வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக
இலண்டன் உயிரியல் சங்கத்தின் ஒத்துழைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.