திருத்தந்தை : குடும்பம் குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்காகச் செபிக்க அழைப்பு
அக்.01,2014. வருகிற ஞாயிறன்று ஆரம்பிக்கவிருக்கும் குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு
மாமன்றத்திற்காகச் செபிக்குமாறு விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்னைமரியாவின்
வாழ்வையும், செபமாலையில் அவரது திருமகனின் மறையுண்மைகளையும் தியானிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள
இந்த மாதத்தில், திருஅவையின் கருத்துக்களுக்காகவும், சிறப்பாக, குடும்பம் குறித்த உலக
ஆயர்கள் மாமன்றத்திற்காகவும் செபிக்குமாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். தூய ஆவியாரின்
பல்வேறு கொடைகள் குறித்து இப்புதனன்று வழங்கிய பொது மறையுரையில் இவ்வாறு விசுவாசிகளிடம்
கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறும் கூறினார். மேலும்,
அக்டோபர் முதல் தேதியன்று சிறப்பிக்கப்பட்ட, மறைத்தளங்களின் பாதுகாவலர் தூய குழந்தை தெரேசா
பற்றிக் குறிப்பிட்டு, கஷ்டமான நேரங்களில் இப்புனிதை போன்று செபிக்குமாறும் கூறினார்
திருத்தந்தை. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம், இம்மாதம் 5 முதல் 19
வரை வத்திக்கானில் நடைபெறுகின்றது. 14 திருமணமான தம்பதியர்கள், பிற கிறிஸ்தவ சபைகளின்
பிரதிநிதிகள் உட்பட 253 பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் செபமாலை அன்னைமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள மாதமாகும்.