கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து ஈராக்கைக் கட்டியெழுப்ப முஸ்லிம்களுக்கு அழைப்பு
செப்.30,2014. மதத்தைப் புண்படுத்தும் வன்முறை, பிரிவினைவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு
எதிராக, ஈராக்கிய கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து அந்நாட்டு முஸ்லிம்களும் கண்டனம் தெரிவிக்குமாறு
கேட்டுக்கொண்டுள்ளார் பாக்தாத் முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ. முஸ்லிம்களின்
Eid al-Adha தியாகத் திருவிழாவை முன்னிட்டு, ஈராக்கிலும், உலகெங்கிலுமிருக்கின்ற முஸ்லிம்
சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், தீமையின் ஒவ்வொரு
வடிவத்திலிருந்தும் நாட்டை பாதுகாக்குமாறு இறைவனிடம் செபிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இன்னல்கள்
மற்றும் துன்பங்கள் மத்தியிலும், ஒவ்வொருவர் மீதும் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கும் அன்பைக்
குறிப்பிட்டுள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், தேசிய தனித்துவத்துக்கும், ஒன்றிணைந்து
வாழ்வதற்கும் சகிப்புத் தன்மையும், ஒருவர் ஒருவர் மீதான மதிப்பும், நீதியும் அவசியம்
என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். ஈராக்கில் உண்மையான அமைதி நிலவ, ஒப்புரவுக்கும்,
துணிச்சலான உரையாடலுக்கும் அழைப்பு விடுத்துள்ள அதேவேளை, ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின் அடக்குமுறையிலிருந்து
மோசுலையும் நினிவே பகுதியையும் காப்பாற்றுமாறு, ஈராக் அரசுக்கும், குர்திஸ்தான் அதிகாரிகளுக்கும்
வேண்டுகோள் விடுத்துள்ளார் பாக்தாத் முதுபெரும் தந்தை சாக்கோ.