2014-09-30 15:36:23

அக்டோபர் 01, புனிதரும் மனிதரே – மௌனத்தாலும் மறைபரப்புப் பணிகள் ஆற்றலாம்


இளம் பெண் ஒருவர் இவ்வுலகில் வாழ்ந்தது 24 ஆண்டுகளே. திருத்தந்தையின் சிறப்பான உத்தரவைப் பெற்று, 15வது வயதில் கார்மேல் துறவுச் சபையில் இணைந்து இவர், தன் வாழ்வின் மீதி ஒன்பது ஆண்டுகளை, உலகத்தின் கண்களில் படாமல் துறவு மடத்தில் செபத்திலும் தவத்திலும் கழித்தார். இப்படி மறைந்த வாழ்வு வாழ்ந்த ஒர் இளம் பெண், அருளாளர் அன்னைத் தெரேசா, புனித மாக்சிமில்லியன் கோல்பே, புனித பாத்ரே பியோ, திருத்தந்தை முதலாம் ஜான் பால் உட்பட பல்லாயிரம் உன்னத உள்ளங்களில் தனியொரு இடம் பிடித்தவர். உலகின் மறைபரப்புப்பணி நாடுகள் அனைத்திற்கும் பாதுகாவலராக, இந்த இளம் பெண்ணை, திருஅவை அறிவித்துள்ளது.
பல்லாயிரம் மக்களுக்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்துவைத்த புனித பிரான்சிஸ் சேவியரும், இப்பெண்ணும் மறைபரப்புப்பணி நாடுகளின் பாதுகாவலர்கள் என்று கொண்டாடப்படுகின்றனர். ஒன்பது ஆண்டுகள் (1543-1552) இந்தியாவிலும், இன்னும் சில ஆசிய நாடுகளிலும் ஊர் ஊராகச் சென்று மறையுரைகள் ஆற்றி, பல்லாயிரம் மக்களை இறைவன் பக்கம் அழைத்து வந்தவர் புனித பிரான்சிஸ் சேவியர். ஒன்பது ஆண்டுகளாக (1888-1897) நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்து, தன் செபத்தாலும் தவத்தாலும் பல்லாயிரம் மக்களை இறைவன் பக்கம் அழைத்து வந்தவர் இந்த இளம் பெண். எனவேதான், இருவரும் மறைபரப்புப்பணி நாடுகளின் பாதுகாவலர்கள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் Lisieux நகரில் 1873ம் ஆண்டு பிறந்த தெரேசா, 1897ம் ஆண்டு, தன் 24ம் வயதில் இறையடி சேர்ந்தார். இருபதாம் நூற்றாண்டின் மிகப் புகழ்பெற்ற புனிதர்களில் ஒருவரான இவர், குழந்தை இயேசுவின் தெரேசா என்றும் அழைக்கப்படுகிறார்.
இறைவனிடம் மக்களைக் கொண்டுவந்து சேர்க்கும் பணியை மறையுரைகளால் ஆற்றலாம். மௌனத்தாலும், மன்றாட்டுக்களாலும் ஆற்றலாம் என்பதை, தன் வாழ்வால் நிரூபித்தவர் குழந்தை இயேசுவின் புனித தெரேசா. இவரது திருநாள், அக்டோபர் 1ம் தேதி உலகெங்கும் சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.