2014-09-24 15:27:49

வெப்பநிலை மாற்றங்களைத் தடுப்பதற்கு கலாச்சார மாற்றம் அவசியம், திருப்பீடம்


செப்.24,2014. உலகில் மனிதரின் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள வெப்பநிலை மாற்றங்களைத் தடுப்பதற்கு ஓர் உண்மையான கலாச்சார மாற்றம் அவசியம் என்று திருப்பீடம் ஐ.நா. உச்ச மாநாட்டில் கூறியது.
நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் இச்செவ்வாயன்று வெப்பநிலை மாற்றம் குறித்து நடந்த ஒருநாள் உலக மாநாட்டில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.
உலகில் வெப்பநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசியல் தளங்களில் மட்டும் ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுத்தால் போதாது, மாறாக, ஓர் ஆழமான கலாச்சார மாற்றமும், முழு மனிதக் குடும்பத்திற்கு நல்லதோர் எதிர்காலம் அமைவதற்கு அவசியமான அடிப்படை விழுமியங்கள் மீண்டும் கண்டுணரப்படுவதும் தேவைப்படுகின்றது என்று கர்தினால் பரோலின் அவர்கள் மேலும் கூறினார்.
வெப்பநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் நன்னெறிக் கூறுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறிய கர்தினால், அனைத்துப் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைக்கும்போது ஒவ்வொரு மனிதரின் மாண்புக்கும், பொதுநலனுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவில் அவை இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.