2014-09-24 15:28:14

செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது மங்கள்யான்


செப்.24,2014. செவ்வாய்க் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதற்கு இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட நாட்டின் பல தலைவர்கள் இஸ்ரோ அறிவியலாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மங்கள்யான் விண்கலம், செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது, இந்திய அணி, கிரிக்கெட்டில் பெறும் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்று பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க நேரில் வாழ்த்தியுள்ளார்.
இந்தியர்கள் அனைவருமே கொண்டாட வேண்டிய தருணம் இது. வரலாறு படைக்கப்பட்டுள்ளது. கற்பனையிலும் நினைக்க முடியாத சில விடயங்களை நமது அறிவியலாளர்கள் உண்மையில் செய்து நமது திறமையை நிரூபித்துள்ளனர். உலகத்துக்கே சவால் விடும் வகையில் நமது அறிவியலாளர்கள் செயல்பட்டுள்ளனர் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான் இணைந்தது இந்திய நேரப்படி இப்புதன் காலை 7.59 மணிக்கு உறுதிப்படுத்தப்பட்டது.
ஆசியக் கண்டத்திலிருந்து இதனை நிகழ்த்தியிருக்கும் முதல் நாடு இந்தியா மட்டுமே.
இந்த மங்கள்யான் விண்கலம் 2013ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டா தளத்திலிருந்து ஏவப்பட்டது. ஏறக்குறைய 450 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலகில் வேறு கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்பும் முயற்சியில், மிகக் குறைந்த செலவில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் இதுவேயாகும்.

ஆதாரம் : ஊடகங்கள்







All the contents on this site are copyrighted ©.