செப்.24,2014. இலங்கையில் பொதுமக்கள் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான
அமைப்புக்கள், அனைத்துலக நீதிவிசாரணையை வலியுறுத்துவோர் உள்ளிட்ட பல பிரிவினர்மீது அரசு
மற்றும் அரசு-சாரா அமைப்புக்களால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் கண்டு தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக
ஐ.நா. மனித உரிமை ஆணையர் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் இளவரசர் Zeid
Ra’ad Al Hussein அவர்கள், இலங்கை நிலவரம் தொடர்பாக, சமர்ப்பித்துள்ள வாய்மொழி அறிக்கை
ஒன்றில் இலங்கையின் மனித உரிமை சூழல் குறித்து விரிவாக அலசப்பட்டுள்ளது. உண்மை நிலையை
ஆய்வதற்காக இலங்கை வர விரும்பிய ஒன்பது ஐ.நா. சிறப்புத் தூதர்களுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை
என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தும்
நடவடிக்கையாளர்கள் மீது அச்சு, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்த் தாக்குதல்கள்
தொடுக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இறுதிப்போரின் போது கைது செய்யப்பட்ட
விடுதலைப் புலிகளை விடுவிப்பதில் அரசு பெரும் முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாகவும் அவ்வறிக்கை
சுட்டிக்காட்டியுள்ளது. ஆகஸ்ட் மாத நிலவரத்தின்படி முன்னாள் தமிழ்ப் போராளிகள் 114 பேர்
மட்டுமே மறுவாழ்வு மையங்களில் இருப்பதாகவும், 84 பேர் சட்ட விசாரணைகளை எதிர்கொண்டு இருப்பதாகவும்
கூறப்பட்டுள்ளது.