செப்.23,2014. ஆப்ரிக்காவைப் பாதித்துள்ள எபோலா நோய்ப் பிரச்சனை முடிவுக்கு வருவதற்குத்
தான் செபிப்பதாகவும், இந்நோயாளிகள் மத்தியில் பணிசெய்யும் அனைவரையும் தான் பாராட்டி ஊக்குவிப்பதாகவும்
கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆயர்கள் திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினாவையொட்டி
ஆப்ரிக்காவின் கானா நாட்டு ஆயர்களை இச்செவ்வாயன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை,
கானா நாட்டில் மட்டுமல்லாமல், மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிற
நாடுகளிலும் திருஅவையின் நலவாழ்வுப் பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.
இந்நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தபோது அதனால் தாக்கப்பட்டு இறந்த குருக்கள், துறவிகள்
உட்பட இந்நோயால் இறந்த அனைவரையும் நினைத்துச் செபிப்பதாகவும், இந்நோய் மேலும் பரவாமல்
தடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படுவதற்கு நலவாழ்வுப் பணியாளர்களைத் ஊக்குவிப்பதாகவும்
கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கானா ஆயர்களுக்குக்
கூற விரும்பிய கருத்துக்கள் உரை வடிவில் அவர்களிடம் கொடுக்கப்பட்டன. மேற்கு ஆப்ரிக்க
நாடாகிய கானாவில் வாழும் 2 கோடியே 70 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 15 விழுக்காட்டினர்
கத்தோலிக்கர்.