செப்.23,2014. பங்குத்தளங்கள் மற்றும் துறவு நிறுவனங்கள் தங்களின் இடங்களை குடியேற்றதாரருக்கும்,
புலம்பெயர்ந்தோருக்கும் திறக்கவேண்டுமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓராண்டுக்குமுன்
விடுத்த அழைப்பை ஏற்று, இத்தாலியிலுள்ள பங்குத்தளங்களும், துறவு நிறுவனங்களும் 4,000
குடியேற்றதாரர்க்குப் புகலிடம் அளித்துள்ளன என்று இத்தாலிய ஆயர் பேரவை அறிவித்தது. 2015ம்
ஆண்டில் கடைப்பிடிக்கப்படும், உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் நாளுக்கான
திருத்தந்தையின் செய்தி இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டபோது இதனை அறிவித்தார் இத்தாலிய
ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் ஆணைக்குழுத் தலைவர் ஆயர் ஜான்கார்லோ பெரெகோ. 2013ம்
ஆண்டில் உலகில் 23 கோடியே 20 இலட்சம் குடியேற்றதாரர் இருந்தனர். இவ்வெண்ணிக்கை, 1990க்கும்
2013ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏறக்குறைய 50 விழுக்காடு அதிகரித்தது எனக் கூறப்படுகிறது.