மேரி மேஜர் பசிலிக்காவில் திருத்தந்தையின் நன்றி செபம்
செப்.22,2014. செப்டம்பர் 21, ஞாயிறன்று தான் மேற்கொண்ட அல்பேனியத் திருப்பயணம் வெற்றிகரமாக
நடைபெற்றதற்காக இத்திங்கள் காலையில் உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று செபித்தார் திருத்தந்தை
பிரான்சிஸ். புனித மேரி மேஜர் பசிலிக்காவில், உரோம் மக்களின் பாதுகாவலரான அன்னைமரியிடம்
ஏறத்தாழ 10 நிமிடங்கள் அமைதியாகச் செபித்து, இறுதியில் அங்கு குழுமியிருந்த விசுவாசிகளோடு
இணைந்து ‘வாழ்க மரியே’ என்ற செபத்தையும் செபித்தார். அல்பேனியாவின் திரானா பெத்தானியா
மாற்றுத்திறனாளிகளுக்கானச் சிறார் இல்லத்தில் தனக்கு வழங்கப்பட்ட மலர்க்கொத்தையும் அன்னை
மரி திருவுருவத்தின் பாதங்களில் அர்ப்பணித்தார் திருத்தந்தை. திருப்பயணங்களை மேற்கொள்வதற்கு
முன்னரும், திருப்பயணங்களை முடித்துத் திரும்பும்போதும் புனித மேரி மேஜர் பசிலிக்காவில்
செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.