2014-09-22 16:36:12

செப்.28, முதியோருடன் திருத்தந்தை திருப்பலி


செப்.22,2014. இத்தாலி, இஸ்பெயின், அர்ஜெண்டீனா, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட உலகின் 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வரும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியோர்களுடன் வரும் ஞாயிறன்று வத்திக்கானில் திருப்பலி நிகழ்த்த உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பலி துவங்குவதற்கு முன்னர் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை விவிலிய உதாரணங்களுடன் முதியோர் பங்குகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று இடம்பெற உள்ளது. பழைய ஏற்பாட்டின் சாரா, நகோமி, ரூத் உட்பட முக்கிய நபர்கள் குறித்தும், புதிய ஏற்பாட்டின் செக்கரியா, எலிசபெத், சிமியோன், அன்னா ஆகியோர் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு, விசுவாசத்தை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்ல வேண்டிய முதியோரின் கடமைகள் வலியுறுத்தப்படும்.
இந்த உலக முதியோர் சந்திப்பின்போது ஈராக்கிலிருந்து கலந்துகொள்ளும் வயது முதிர்ந்த ஒரு தம்பதி, ஈராக்கில் முதியோர் அனுபவிக்கும் துன்பங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் நேரடியாக எடுத்துரைப்பர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதியோருடனான இஞ்ஞாயிறு திருப்பலி இத்தாலிய நேரம் 10.30 மணிக்குத் துவங்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.