ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பின் முடிவுகளுக்கு ஆயர்கள் ஆதரவு
செப்.19,2014. ஸ்காட்லாந்து, பிரிட்டனோடு இணைந்தே இருப்பதற்குத் தீர்மானித்துள்ள பொது
மக்கள் கருத்து வாக்கெடுப்பின் முடிவுகளைத் தாங்கள் அங்கீகரித்து மதிப்பதாக, ஸ்காட்லாந்து
ஆயர் பேரவை அறிவித்துள்ளது. பொதுவான விவாதங்களிலும், தீர்மானங்கள் எடுப்பதிலும் கத்தோலிக்க
சமுதாயம் தொடர்ந்து ஈடுபடுமாறும், இவ்வாறு செய்வதன்மூலம் கிறிஸ்தவ செய்தியின் பொருளையும்
முக்கியத்துவத்தையும் நிலைநிறுத்த முடியும் என்றும் ஸ்காட்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஸ்காட்லாந்து, பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாவது குறித்து இவ்வியாழக்கிழமை
நடைபெற்ற பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பில் 55 விழுக்காட்டு வாக்குகள், ஸ்காட்லாந்து,
பிரிட்டனிலிருந்து பிரிந்து செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. கடந்த 307
ஆண்டுகளாக பிரிட்டனின் ஓர் அங்கமாக இருந்துவரும் ஸ்காட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து
செல்ல விரும்பி பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இதற்கு ஆதரவுக்குத்
தேவையான வாக்குகள் பதிவாகவில்லை.