பொருளாதாரம் மனிதருக்குப் பணிபுரிய திருத்தந்தை அழைப்பு
செப்.19,2014. ஐரோப்பாவை அழுத்துகின்ற விவகாரங்களுக்கு நற்செய்தியின் ஒளியில் பயனுள்ள
வகையில் தீர்வுகாணும் வழிகளைக் காணவேண்டிய சவாலை ஐரோப்பியத் திருஅவை கொண்டுள்ளது எனக்
கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இஸ்பெயின் தலைநகர் மத்ரித்தில் நடைபெற்றுவரும்,
2வது ஐரோப்பிய கத்தோலிக்க சமூக நாள்கள் என்ற கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில்,
ஐரோப்பா எதிர்கொள்ளும் இளையோர் வேலைவாய்ப்பின்மை மற்றும் இக்கண்டத்தில் புகலிடம் தேடும்
மக்களின் பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார் திருத்தந்தை. பொருளாதாரமும், சமூக
ஒழுங்குமுறைகளும் மனிதருக்குப் பணிபுரிவதாய் இருக்க வேண்டும் என்றும், மக்கள் தங்களின்
இறுதி நிறைவை இறைவனிலே காண முடியும் என்பதை உணர்த்தும் மனமாற்றமும் தனிசெபமும் அவசியம்
என்றும் அச்செய்தி வலியுறுத்துகிறது. திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள்,
திருத்தந்தையின் பெயரில் இச்செய்தியை மத்ரித் கூட்டத்துக்கு அனுப்பியுள்ளார். செப்டம்பர்
21, வருகிற ஞாயிறன்று நிறைவடையும் இக்கூட்டத்தில் 200க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.