உக்ரேய்னில் இரத்தம் ஓடுகிறது, அமெரிக்கா அது குறித்துப் பேச வேண்டும்
செப்.19,2014. இரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளால் உக்ரேய்னில் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கின்றது
என்று கூறும் உக்ரேய்ன் கிரேக்க-கத்தோலிக்க ஆயர்களின் நெஞ்சை உருக்கும் வேண்டுகோளுக்கு
அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர் செவிமடுக்குமாறு கேட்டுள்ளார் நியுயார்க் கர்தினால்
திமோத்தி டோலன். பனிப்போரின்போது போலந்து, உக்ரேய்ன், குரோவேஷியா, லித்துவேனியா, ஹங்கேரி
மற்றும் முன்னாள் சோவியத் யூனியனின் கீழிருந்த மற்ற நாடுகளில் நசுக்கப்பட்ட கிறிஸ்தவர்களுடன்
அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டிருந்ததையும் நினைவுபடுத்தினார்
கர்தினால் டோலன். பனிப்போரின்போது நசுக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக நாம் பேசியதற்கு
அமெரிக்க அரசு செவிசாய்த்தது, உக்ரேய்னில் நிலைமைகள் மாறுபடும் என நம்பினோம் என்றுரைத்துள்ள
கர்தினால் டோலன், சிலகாலமே இந்நாடு சுதந்திரமாக, ஒளிமயமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். தனது
அண்டை நாட்டுத் தலையீட்டால் அந்நாட்டில் மத சுதந்திரம் பிரச்சனையாகி இருக்கின்றது என்றும்,
அந்நாட்டுக்கு உதவ வேண்டுமென்ற ஆயர்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்போம் என்றும் கூறியுள்ளார்
கர்தினால் டோலன்.