திருத்தந்தை : அல்பேனியத் திருப்பயணத்துக்காகச் செபிக்க அழைப்பு
செப்.17,2014. வருகிற ஞாயிறன்று தான் மேற்கொள்ளவுள்ள அல்பேனிய நாட்டுக்கானத் திருப்பயணத்துக்காகச்
செபிக்குமாறு இப்புதன் பொது மறையுரையின் இறுதியில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கான்
தூய பேதுரு வளாகத்தில் நடந்த பொது மறையுரையின் இறுதியில் இவ்வாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஞாயிறன்று கடவுளின் உதவியால் நான் அல்பேனியவுக்குச் செல்கிறேன்,
கடுமையான கடவுள்நம்பிக்கையற்ற ஆட்சியால் இந்நாடு மிகவும் துன்புற்றுள்ளதால் இந்நாட்டுக்குச்
செல்வதற்கு நான் தீர்மானித்தேன், இந்நாட்டில் தற்போது பல்வேறு மதத்தவர் அமைதியான நல்லிணக்கத்துடன்
வாழ்ந்து வருகின்றனர் எனத் தெரிவித்தார். இப்புதன் பொது மறையுரையில், இத்திருப்பயணம்
மேற்கொள்ள வாய்ப்பளித்த அல்பேனிய மக்களுக்குத் தனது சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்த
திருத்தந்தை, இத்திருப்பயணத்தில் செபத்தால் தன்னோடு இணைந்திருந்து, நல்லாலோசனை அன்னையின்
பரிந்துரையைக் கேட்குமாறும் கூறினார். வருகிற ஞாயிறன்று திருத்தந்தை மேற்கொள்ளும்
அல்பேனியத் திருப்பயணம், இத்தாலிக்கு வெளியே அவர் மேற்கொள்ளும் முதல் ஐரோப்பியத் திருப்பயணமாகும்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில், 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 58.79
விழுக்காட்டினர் முஸ்லிம்கள். 16.99 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.