அமைதிக்காக உழைக்கும் உலகம் உண்மையுள்ளது, திருப்பீடத் தூதர்
செப்.17,2014. அமைதியை ஒரேயடியாகப் பெற முடியாது, மாறாக, அது அன்றாட வாழ்வில் நீதிக்காக
முயற்சிப்பது மற்றும் ஒருவர் ஒருவரை மதிப்பதன் பயனாகக் கிடைப்பதாகும் என, ஐ.நா.வுக்கான
திருப்பீடத்தின் புதிய நிரந்தரப் பார்வையாளர் கூறினார். நியுயார்க்கில் தொடங்கியுள்ள
69வது ஐ.நா.பொது அவைக்காக இடம்பெற்ற பல்சமய செப வழிபாட்டில் இவ்வாறு உரைத்த பேராயர் Bernardito
Auza அவர்கள், மத நம்பிக்கையாளர்களுக்கு, அமைதி, மனித முயற்சிகளால் மட்டும் ஏற்படுவதில்லை,
ஆனால் அது இறைவனின் கொடையாகப் பெறப்படுவதாகும் என்று கூறினார். குருக்கள், அரசியல்
தூதர்கள், ஐ.நா. பணியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்ட இச்செப வழிபாட்டில், ஐ.நா. நிறுவனம்
உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற அனைவரும் செயல்படுமாறு வலியுறுத்தினார் பேராயர் Auza. மேலும்,
இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள 69வது ஐ.நா.பொது அவையில், மில்லென்ய வளர்ச்சித் திட்ட இலக்கின்
அடுத்த கட்டம் விவாதிக்கப்பட்டு வருகிறது. 193 உறுப்பு நாடுகள் பங்கெடுக்கும் இந்த
அவையில் இம்மாதம் 24ம் தேதியிலிருந்து நாடுகளின் தலைவர்கள் உரையாற்றத் தொடங்குவார்கள்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.