செப்.16,2014. அகிலத் திருஅவையின் நிர்வாகம் மற்றும் திருப்பீடத் தலைமையகச் சீர்திருத்தத்தில்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு உதவுவதெற்கென உருவாக்கப்பட்டுள்ள கர்தினால்கள் அவையின்
ஆறாவது கூட்டத்தின் இரண்டாம் நாள் அமர்வு இச்செவ்வாய் காலை திருத்தந்தையின் தலைமையில்
தொடங்கியது. எட்டுப் பேர் கொண்ட இக்கர்தினால்கள் அவையில், திருப்பீடச் செயலர் கர்தினால்
பியெத்ரோ பரோலின் அவர்களை ஒன்பதாவது நபராகத் திருத்தந்தை சேர்த்துள்ளார் என, திருப்பீட
செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருப்பீடச்
செயலராக நியமனம் செய்யப்பட்டதிலிருந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டுவருகிறார். இத்திங்களன்று
தொடங்கியுள்ள இக்கர்தினால்கள் அவையின் ஆறாவது கூட்டம் இப்புதனன்று நிறைவடையும். மேலும்,
நம் ஆண்டவர் தமது அன்பை நமக்குக் கொடுப்பதற்கு எப்போதும் காத்திருக்கிறார், இது ஒரு பிரமிக்கவைக்கும்
காரியம், நம்மை வியப்பில் ஆழ்த்துவதை ஒருபொழுதும் நிறுத்திக்கொள்ளாத காரியம் இது என்று,
இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.