2014-09-16 16:28:26

திருத்தந்தையின் இலங்கைத் திருப்பயணம் : “என் அன்பில் நிலைத்திருங்கள்”


செப்.16,2014. “என் அன்பில் நிலைத்திருங்கள்” என்ற யோவான் நற்செய்தியிலுள்ள திருச்சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைத் திருப்பயணத்தின் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என, கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் அறிவித்தார்.
2015ம் ஆண்டு சனவரி 13 முதல் 15 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் இலங்கைத் திருப்பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இத்தலைப்பானது, அனைவருக்கும், குறிப்பாக ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு திருத்தந்தை வெளிப்படுத்தும் கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிப்பதாய் உள்ளது எனக் கூறினார் கர்தினால் இரஞ்சித்.
அமைதி, அன்பு மற்றும் ஒப்புரவுச் செய்தியைப் பரப்புவதற்கு இன்றைய இலங்கைத் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்றும், திருத்தந்தையின் இத்திருப்பயணம், இலங்கைத் திருஅவையின் ஒப்புரவுப் பாதையை ஊக்கப்படுத்தும் சக்தியாக அமையும் என்றும் கூறினார் கர்தினால் இரஞ்சித்.
இலங்கை கத்தோலிக்கத் திருஅவையின் தூணாக நோக்கப்படும் அருளாளர் ஜோப் வாஸ் அவர்கள், இத்திருப்பயணத்தின்போது புனிதராக அறிவிக்கப்படுவார் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் அறிவித்தார்
மேலும், திருத்தந்தையின் இலங்கைத் திருப்பயணத்திற்கென புதிய இணையதளம் ஒன்று சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திறக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.