திருத்தந்தை பிரான்சிஸ் : நமக்கு இரு அன்னையர்கள் உள்ளனர்
செப்.15,2014. நாம் ஒருபோதும் அநாதைகள் அல்ல, ஏனெனில் நமக்கு இரு அன்னையர்கள் உள்ளனர்,
ஒருவர் அன்னைமரி, மற்றொருவர் நம் தாயாம் திருஅவை என்று இத்திங்கள் காலை திருப்பலி மறையுரையில்
கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திங்களன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட வியாகுல
அன்னை திருவிழாவையொட்டி தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்
திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையும், பணிவு,
துன்புறுதல் மற்றும் கற்றுக்கொள்ளல் பாதையிலேயே நடைபோட்டு, தாயாய் நின்று நம்மை வழிநடத்துகிறது
என்று கூறினார். இவ்விரு அன்னையரும் கிறிஸ்துவை நமக்குத் தருகிறார்கள், அன்னையாம்
திருஅவை இன்றி நம்மால் முன்னோக்கி நடைபோட முடியாது எனவும் தனது மறையுரையில் எடுத்துரைத்த
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னைமரியும், திருஅவையும் கிறிஸ்துவாம் நம்பிக்கையைச்
சுமந்து செல்கிறார்கள் என்றும் கூறினார். திருத்தந்தையின் இந்நாளைய மறையுரை, பணிவு,
துன்புறுதல், அதிலிருந்து கற்றுக்கொள்ளுதல் என்பவைகளை மையம் கொண்டதாக அமைந்திருந்தது.