புருண்டியில் மூன்று இத்தாலிய அருள்சகோதரிகளைக் கொலை செய்தவர் கைது
செப்.11,2014. புருண்டி நாட்டில் பணியாற்றிவந்த மூன்று இத்தாலிய அருள்சகோதரிகளைக் கொன்றவரை
காவல்துறை கைதுசெய்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புனித சவேரியார் துறவு சபையைச்
சேர்ந்த 79 வயதான Bernadetta Boggian, 83 வயதான Olga Raschietti, 75 வயதான Lucia Pulici
ஆகிய மூன்று இத்தாலிய அருள்சகோதரிகளும் புருண்டி நாட்டின் புஜூம்புரா என்ற ஊரில் இஞ்ஞாயிறன்று
கொல்லப்பட்டனர். இவர்களைக் கொலை செய்தவரைக் கைதுசெய்துள்ளதாகவும், அவரிடம் இச்சகோதரிகளில்
ஒருவர் பயன்படுத்திய கைபேசியும், இத்துறவு இல்லத்தின் திறவுகோல்களும் இருந்தன என்றும்
காவல்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே, இம்மூன்று அருள்சகோதரிகளின் உடல்களும் அவர்கள்
ஏற்கனவே வெளியிட்டிருந்த விருப்பத்தின்படி புருண்டி நாட்டிலேயே புதைக்கப்படும் என்று,
இத்துறவு சபையின் முன்னாள் மாநில தலைமைச் சகோதரி Delia Guadagnini அவர்கள் Fides செய்தியாளர்களிடம்
கூறினார்.