2014-09-10 14:56:50

ISIS தீவிரவாதிகளின் வன்முறைச் செயல்களுக்கு நியூ யார்க் நகரில் இஸ்லாமியரின் கண்டனப் போராட்டம்


செப்.10,2014. ISIS தீவிரவாதிகளின் வன்முறைச் செயல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நியூ யார்க் நகரில் இஸ்லாமியர் பலர், இப்புதனன்று அமைதிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
2001ம் ஆண்டு, செப்டம்பர் 9ம் தேதி நியூ யார்க் நகரின் இரு வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்காவில், பொதுவாக இஸ்லாமியர் மீது எழுந்துள்ள நம்பிக்கையற்ற நிலையைக் களைய, இந்த முயற்சி ஓரளவாகிலும் உதவும் என்று இப்போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
அமெரிக்காவில் வாழும் பல்லாயிரம் இஸ்லாமியர், தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தாலும், ஊடகங்களில் அவர்கள் குரல் ஒலிப்பதில்லை என்ற கவலையை, இக்குழுவினர் வெளிப்படுத்தினர்.
இஸ்லாமிய மதத்தின் பெயரைச் சொல்லி, ISIS தீவிரவாதிகள் மேற்கொள்ளும் காட்டுமிராண்டித்தனமானச் செயல்கள் எதுவும் இஸ்லாமியக் கோட்பாடுகள் அல்ல என்பதையும் இவ்வுலகம் உணர வேண்டும் என்றும் இந்த அமைதிப் போராட்டக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.