திருத்தந்தை பிரான்சிஸ் : “கடவுளின் பிரமாணிக்கம் நமது பற்றுறுதியின்மையைவிட உறுதியானது”
செப்.09,2014. “கடவுளின் பிரமாணிக்கம் நமது பிரமாணிக்கமின்மை, நமது பற்றுறுதியின்மையைவிட
உறுதியானது” என்ற சொற்களை, தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று எழுதியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். மேலும், செப்டம்பர் 14, வருகிற ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில்
20 தம்பதியருக்குத் திருமணம் எனும் அருளடையாளத்தை நிறைவேற்றவுள்ளார் திருத்தந்தை. திருச்சிலுவை
உயர்த்தப்பட்ட விழாவாகிய வருகிற ஞாயிறன்று உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு, உரோம் மறைமாவட்டத்தைச்
சேர்ந்த 20 புதுமணத் தம்பதியர் திருத்தந்தையிடமிருந்து திருமணம் எனும் அருளடையாளத்தைப்
பெறவுள்ளனர். குடும்பம் குறித்த 3வது உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் நடப்பதற்கு மூன்று
வாரங்களுக்கு முன்னர் இந்நிகழ்வு நடக்கின்றது. இன்னும், உலகில் கொடுஞ்செயல்களைத்
தடுப்பதற்கு, மனித சமுதாயத்துக்கு எதிராகக் குற்றமிழைப்பவர்களை உறுதியான நடவடிக்கைகளால்
கையாள வேண்டும் என, திருப்பீடச் செயலகம் இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளது. இவ்வார்த்தைகள்,
பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், ஐ.நா.வின் 22வது சிறப்பு மனித உரிமைகள் அவையில் கூறியவை.